திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.9 திருஅங்கமாலை
பண் - சாதாரி
தலையே நீவணங்காய் - தலை
    மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
    தலையே நீவணங்காய்.
1
கண்காள் காண்மின்களோ - கடல்
    நஞ்சுண்ட கண்டன்தன்னை
எண்டோள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
    கண்காள் காண்மின்களோ.
2
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
    எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
    செவிகாள் கேண்மின்களோ.
3
மூக்கே நீமுரலாய் - முது
    காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை
    மூக்கே நீமுரலாய்.
4
வாயே வாழ்த்துகண்டாய் - மத
    யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை
    வாயே வாழ்த்துகண்டாய்.
5
நெங்சே நீநினையாய் - நிமிர்
    புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
    நெங்சே நீநினையாய்.
6
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
    மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனை
    கைகாள் கூப்பித்தொழீர்.
7
ஆக்கை யாற்பயனென் - அரன்
    கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
    வாக்கை யாற்பயனென்.
8
கால்க ளாற்பயனென் - கறைக்
    கண்டண் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
    கால்க ளாற்பயனென்.
9
உற்றா ராருளரோ - உயிர்
    கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல்லால் நமக்
    குற்றார் ஆருளரோ.
10
இருமாந்து இருப்பன்கொலோ - ஈசன்
    பலகணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான்ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று அங்கு
    இறுமாந்து இருப்பன்கொலோ.
11
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
    மாலொடு நான்முகனும்
தேடிக் தேடொணாத் தேவனை என்னுளே
    தேடிக் கண்டுகொண்டேன்.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com